மக்கள் வெளிச்சம் நாளிதழ்
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் தேவராயன் CBSE பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாணவர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் பள்ளியின் மாணவத் தலைவன், தலைவி மற்றும் விளையாட்டு குழுவின் செயலாளர் ஆகியோர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தேர்தலில் சித்தார்த் பிரபு, ரோஷன், ஜீவித் கிருஷ்ணா, வினித், அஷ்விகா, அதிஷா மற்றும் மேகநேத்ரா ஆகியோர்கள் போட்டியிட்டனர். மழழையர் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். முன்னதாக கணிணி ஆசிரியை சித்தாரா வாக்கு அளிப்பதற்கான மென்பொருள் ஒன்றை வடிவமைத்திருந்தார். இது குறித்து பள்ளி முதல்வர் திரு.பாலமுருகன் கூறுகையில்: வருங்காலத் தலைவர்களாக வலம் வர இருக்கும் தற்போதைய மாணவர்களுக்கு தேர்தல் மற்றும் தேர்தலின் அவசியத்தையும் தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் விதமாக இத்தேர்தல் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் தங்களை வழி நடத்தக்கூடிய திறமையுள்ள தலைவர்களை தாங்களே தேர்வு செய்யும் குறிக்கோளில் இத்தேர்தல் நடத்தப்பட்டது. எதிர் கால ஜனநாயகத்தை சிறப்பாக வடிவமைக்க மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் அறிவுரைகள் கூறப்பட்டது. தேர்தலின் முடிவுகள் ஆகஸ்ட் 15ஆம் நாள், சுதந்திரதினத்தன்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். தேர்தலில் போட்டியிட்ட மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், தி சென்னை சில்க்ஸ் இன் உரிமையாளருமான திரு.ஆறுமுகம், நிர்வாக உறுப்பினர்கள் திரு.பிரசன்னா அங்குராஜ் மற்றும் திரு.கண்ணபிரான் ஆகியோர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் அபிதா ஜோன்ஸ், பீஷ்மா, பிரதீப், ஶ்ரீலேகா உள்ளிட்டோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments
Post a Comment