மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மேட்டுப்பாளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கிவைத்து சிறப்புரை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் களஆய்வுகளை மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா
கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் அ.மெஹரிபா பர்வின், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பஷீர் அகமது, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டம் நடத்தப்பட வேண்டும். என அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் வட்டத்திற்குட்பட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசிமுட்டைகளின் இருப்பு எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், அரிசியின் தரத்தை சோதித்து பார்த்தார். மேலும், பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பாரதி நகர் நியாய விலைக்கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை, அருண் நகர் பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுவரும் பணி, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம், மணி நகர் நகரவை உயர்நிலைப்பள்ளி, காவல் நிலையம், அன்னூர் சாலையில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம், சங்கர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் அறை, ஆதார் மையம், இ-சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார். மேலும், மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள், பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்ததுடன், அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், ஓடந்துறை ஊராட்சி, கோத்தகிரி சாலையில் உள்ள சோதனை சாவடியில் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இலங்கை தமிழர் குடியிருக்கும் வேடர் காலனி பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மேட்டுப்பாளையம், நகரக்கூட்டுறவுக் வங்கி சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.37 இலட்சம் மதிப்பில் வீட்டுவசதிக் கடன்களும், 4 பயனாளிகளுக்கு ரூ.4இலட்சம் மதிப்பில் தொழில் முனைவோர் கடன் உதவிகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50ஆயிரம் மதிப்பில் கடன் உதவிகளும், சிறுமுகைத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் மனோரஞ்சிதம் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2 உறுப்பினர்களுக்கு ரூ.2இலட்சம் மதிப்பில் கடன்உதவிகளும், 4 பயனாளிகளுக்கு ரூ.4.70 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன்களும், ரூ.50ஆயிரம் மதிப்பில் 1 பயனாளிக்கு டாப்செட்கோ கடனுதவியையும் 9 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சான்றிதழ்களும், 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.48.70 இலட்சம் மதிப்பிலான அரசுநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வட்டத்திற்குட்பட்ட சிக்கதாசம்பாளையம், நெல்லித்துறை, காரமடை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம், சிறுமுகை, ஜடையாம்பாளையம், கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், மருதூர், ஓடந்துறை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம், இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, மூடுதுறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஆகிய 19 கிராமங்களுக்கு நியமிக்கப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக காலை முதல் மதியம் வரை களஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கைகளை மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி களஆய்வு குறித்த விவரங்களை துறை தலைமை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
Comments
Post a Comment