மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கோனியம்மன் கோவில் திருத்தேர் பெருந்திருவிழா
முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
கோவை:-ஜன-19 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.செல்வசுரபி, மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) சரவணகுமார், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை ஆணையர் செ.வ.ஹர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மு.கோகிலா, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் செயல்அலுவலர் சந்திரமதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா 19.01.2024 முதல் 28.01.2024 வரையிலும் மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா 28.02.2024 அன்றும் நடைபெறவுள்ளது. இத்திருவிழாக்கள் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற் கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். போதிய அளவிலான காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும். மாநகராட்சியின் மூலம் திருவிழாவின் போது மொபைல் டாய்லெட் வசதிகளும், குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.
தேர்த்திருவிழா துவங்கும் முன் திருத்தேரின் சக்கரங்கள் மற்றும் தேர்வடம் ஆகியவற்றின் உறுதி தன்மையை பரிசோதித்து, தேர் இயங்குவதற்கேற்ற நல்லநிலையில் உள்ளதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். பக்தர்களுக்கு வனவிலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வழிபாடு செய்திட போதிய பாதுகாப்பு வழங்கவும், சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றிடவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பிகளை சரி செய்திடவும், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை சரிவர கண்காணித்திடவும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.பொது சுகாதாரத்துறை மூலம் திருவிழா நடைபெறும் நாட்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, மருத்துவர்களை கொண்டு அவசர மருத்துவ முகாம் அமைத்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவேண்டும். தேர்செல்லும் பாதைகளில் உள்ள மேடு, பள்ளங்கள் ஏதேனுமிருப்பின் அதனை சீர்படுத்தி சாலை செப்பனிடுதல் வேண்டும். தேரோடும் நாளான 28.02.2024அன்று நகரப்பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களின் வருகையை தேர் செல்லும் பாதைகளிலிருந்து மாற்றுப் பாதையில் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, திருக்கோயில் நிர்வாகம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
Comments
Post a Comment